ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, ‘பி.எஸ்.எல்.வி., – சி48’ என்ற ராக்கெட்டை, இன்று (டிச.,11) இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. வெளிநாட்டு செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், ‘ரிசாட் – 2 பி.ஆர்.,1’ என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கை கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி48ராக்கெட், இன்று மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘ரிசாட் -2 பி.ஆர்., 1’ செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ரிசாட் – 2 பி.ஆர்.,1 செயற்கைகோள் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.